ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் (IPS) அதிகாரி கே.கே. பிஷ்னோய் என்பவரின் திருமணத்தில் நடைபெற்ற ஒரு பாரம்பரிய சடங்கு தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற இவரது திருமண ஊர்வலத்தின் போது, மணமகன் சீருடையில் இருந்த பிஷ்னோய்க்கு அவரது தாய் பால் கொடுப்பது  போன்ற ஒரு சடங்கு நடைபெற்றது. இந்த வீடியோவைப் பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்தாலும், இது ராஜஸ்தானின் சில சமூகங்களில் பின்பற்றப்படும் மிகப்பழமையான மற்றும் உணர்வுப்பூர்வமான ஒரு பாரம்பரியச் சடங்கு என்பது தெரியவந்துள்ளது.

இந்தச் சடங்கு என்பது நேரடியான ஒன்றாகப் பார்க்கப்படாமல், ஒரு குறியீடாகவே  செய்யப்படுகிறது. ஒரு மகன் திருமணத்தின் மூலம் தனது புதிய வாழ்க்கையைத் தொடங்கும் முன், அவனுக்கு ஊட்டமளித்து வளர்த்த தாயின் கடைசிப் பெரும் கடமையாக இது கருதப்படுகிறது. இத்தனை காலம் உன்னை ரத்தமும் பாலும் கொடுத்து வளர்த்தேன். நீ பெரியவனாகி புதிய வாழ்விற்குச் சென்றாலும், தாயின் ஆசி என்றும் உனக்கு உண்டு” என்பதை உணர்த்துவதே இச்சடங்கின் நோக்கம் எனப் பண்பாட்டு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த வீடியோ பரவத் தொடங்கியவுடன், “இது என்ன மாதிரியான கலாச்சாரம்?” எனப் பலரும் கேள்வி எழுப்பினர். ஆனால், இந்தியாவின் பன்முகத்தன்மையை அறிந்தவர்கள், “ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு விதமான சடங்குகள் உண்டு. நவீனக் கண்ணோட்டத்தில் இதைப் பார்க்காமல், அந்த மண்ணின் உணர்வோடும் கலாச்சாரப் பின்னணியோடும் இதைப் புரிந்துகொள்ள வேண்டும்” என ஆதரவாகக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

டிஜிட்டல் யுகத்தில் இத்தகைய அரிய மற்றும் பழமையான சடங்குகள் பொதுவெளிக்கு வரும்போது, அவை தவறாகப் புரிந்துகொள்ளப்படுவதையும், அதே சமயம் இந்தியாவின் ஆழமான கலாச்சார வேர்களை இவை நினைவுபடுத்துவதையும் இந்தச் சம்பவம் காட்டுகிறது.