தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் தலைமைச் செயலாளராக வெ. இறையன்பு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார். இவருடைய பதவிக்காலம் வருகிற மே மாதம் 31-ஆம் தேதி முடிவடைவதால் அடுத்த தலைமைச் செயலாளர் யார் என்று எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. அடுத்த தலைமைச் செயலர் பதவிக்கு சிலரின் பெயர்கள் அடிபட்ட நிலையில், தற்போது நகராட்சி நிர்வாக துறை செயலாளராக இருக்கும் சிவதாஸ் மீனா தான் தலைமைச் செயலாளராக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இவர் கடந்த 1989-ஆம் ஆண்டு ஐஏஎஸ் பேட்சை சேர்ந்தவர். இவருடைய சொந்த மாநிலம் ராஜஸ்தான். 30 வருடங்கள் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றிய சிவதாஸ் மீனா முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4 செயலாளர்களின் ஒருவராகவும் இருந்தார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சிவதாஸ்  மீனா மத்திய அரசின் பணிக்கு மாற்றப்பட்ட நிலையில், மத்திய அரசின் சுற்றுச்சூழல் பணியில் பணிபுரிந்து வந்தார். அதன் பிறகு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பை ஏற்ற உடன் சிவதாஸ் மீனா மீண்டும் தமிழ்நாட்டுக்கு அழைத்துக் கொள்ளப்பட்டார். இவருக்கு நகராட்சி நிர்வாக துறை செயலாளர் பதவி ஒதுக்கப்பட்ட நிலையில், எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும் திறமையாக செயல்பட கூடியவர். இவர் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சீனியர். மேலும் இது போன்ற பல்வேறு காரணங்களால் சிவதாஸ் மீனாவுக்கு தான் தலைமைச் செயலாளர் பதவி வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சிவதாஸ் மீனா மத்திய அரசின் பணிகளில் சில காலம் இருந்ததால் அவரை மத்திய அரசு தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள அவரையே தலைமைச் செயலாளராக நியமிக்க காய்களை நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் முதல்வர் ஸ்டாலின் அந்த அளவுக்கு எல்லாம் இடம் கொடுக்க மாட்டார் தன்னுடைய அதிகாரி தன் கட்டுப்பாட்டில் இருக்குமாறு வைத்துக் கொள்வார் என்று கூறப்படுகிறது. மேலும் ஆளுநர் வேண்டுமானால் சிவதாஸ் மீனாவை அழைத்து பேசி சில தகவல்களை கேட்டு பெற்று டெல்லிக்கு சொல்லலாம். இருப்பினும் தலைமைச் செயலாளர் என்பது மிக முக்கியமான பதவி என்பதால் முதல்வர் ஸ்டாலின் புதிய தலைமை செயலாளரை நியமிப்பதில் மிகவும் கவனமாகவும் நிதானமாகவும் முடிவெடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.