
பீகார் மாநிலத்தில் நடந்த ஒரு மோசடி தற்போது மிகப்பெரிய அளவில் பரபரப்பாக பேசப்படுகிறது. அதாவது ஒரு வருடமாக போலியாக ஒரு போலீஸ் ஸ்டேஷனை உருவாக்கி லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளனர். பூர்னியா மாவட்டத்தில் உள்ள மோஹானி கிராமத்தில் ராகுல் குமார் ஷா என்பவர் ஒரு போலீஸ் ஸ்டேஷனை உருவாக்கினார்.
இவர் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்களிடம் வேலை வாங்கித் தருவதாக கூறி அவர்களிடம் பணம் வாங்கி லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ள நிலையில் கான்ஸ்டபிள் உள்ளிட்ட பதவிகளை அவரே பணம் வாங்கிக் கொண்டு அவரே சட்டவிரோதமாக நியமித்துள்ளார்.
ஒவ்வொரு வாலிபர்களிடமும் 2000 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை அவர் பணம் வசூலித்து விட்டு போலியான போலீஸ் சீருடைகள் மற்றும் அடையாள அட்டை போன்றவைகளை கொடுத்துள்ளார்.
இவர் அந்த பகுதியில் ரோந்து பணி செல்லவும் சட்ட விரோதமாக மதுபான கடத்தல் போன்றவைகளில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்திய நிலையில் அவர்களிடம் இருந்தும் பணம் வசூலித்து அதில் ஒரு பங்கை தான் வைத்துக்கொண்டு பின்னர் தனக்கு கீழ் பணிபுரிந்தவர்களுக்கு மீதத்தை கொடுத்துள்ளார்.
கடத்தல் காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்யும் மதுபானங்களை அவர்களிடம் லஞ்சம் வாங்கிவிட்டு மீண்டும் அவர்களிடமே திருப்பி கொடுத்துள்ளார். கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக இந்த மோசடி நடைபெற்று வந்த நிலையில் எப்படி வெளிவந்தது என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ராகுல் தலைமறை வாகி விட்ட நிலையில் அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்..