
சென்னை மாவட்டம் அச்சரப்பாக்கத்தைச் சேர்ந்தவர் வசந்தகுமார். இன்ஜினியரிங் பட்டதாரியான வசந்தகுமார் போரூரில் தங்கி தனியார் பயிற்சி மையத்தில் சப் இன்ஸ்பெக்டர் தேர்விற்கு படித்து வந்தார். இவரது நண்பர் அம்ருதீன் திருவான்மியூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
சம்பவம் நடந்த அன்று பெங்களூர் ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் கல்லூரி நண்பர் மடிப்பாக்கம் வந்திருந்ததால் அவரைப் பார்ப்பதற்காக அம்ருதீனும் வசந்தகுமாரும் சென்றனர். பின்னர் அதிகாலை வசந்தகுமாரும், அமருதீனும் மோட்டார் சைக்கிளில் ராஜீவ் காந்தி சாலை வழியாக மத்திய கைலாஷ் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு வசந்தகுமாரை பரிசோதனை செய்து டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அமருதீனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.