கோவையில் உள்ள கோவைப்புதூரில் பிரசித்தி பெற்ற பாலவிநாயகர் கோவிலில் நிகழ்ந்த விசித்திர திருட்டு சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருட வந்த நபர், பணம் எடுத்து வைத்து விட்டு, அசதியில் அங்கேயே தூங்கிய நிலையில் பொதுமக்களால் பிடிபட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவைப்புதூரில் உள்ள இந்த பாலவிநாயகர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். கடந்த ஜூன் 17ஆம் தேதி காலை, வழக்கம் போல பூசாரி கோவிலை திறக்க வந்தபோது, கோவில் கதவு திறந்திருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே உள்ளே சென்று பார்த்தபோது, கோவிலின் உண்டியல் உடைக்கப்பட்டு, அதிலிருந்த பணம் திருடப்பட்டதைக் கவனித்தார்.

மேலும் அதே இடத்தில், உண்டியல் அருகே ஒருவர் படுத்து, குறட்டை விட்டபடி தூங்கிக்கொண்டிருந்தார். இதைக் கண்ட பூசாரி, கோவில் நிர்வாகத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தவர்களிடம் தகவல் தெரிவித்தார். சிறிது நேரத்தில் பொதுமக்கள் அங்கு வந்து, தூங்கிக்கொண்டிருந்த நபரை எழுப்பி விசாரணை நடத்தினர்.

அந்த நபர் தான் கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்து ரூ.8,250 பணம் திருடியதாக ஒப்புக்கொண்டார். பின்னர், அவர் அசதியில் தூங்கி விட்டதாகவும் கூறினார். உடனடியாக அந்த நபரை பொதுமக்கள் பிடித்து குனியமுத்தூர் போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நபர் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு பகுதியை சேர்ந்த சின்னையன் (42) என்பது தெரியவந்தது. மேலும், அவர் மீது ஏற்கனவே பல திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

கடந்த சில மாதங்களாக கோவைப்புதூரில் ஒரு கட்டிட பணிக்கு வேலை செய்த இவர், மீண்டும் பழைய வழியிலேயே திரும்ப முடிவு செய்து, கோவிலில் திருடியதாக தெரிவித்தார். பணத்தை திருடி வெளியே வரும்போது பெய்த மழையால் கோவிலுக்குள்ளேயே காத்திருந்தபோது, தூக்கம் வந்ததால் அங்கேயே தூங்கியதாக கூறினார்.

இதையடுத்து, போலீசார் அவரிடம் இருந்த ரூ.8,250-ஐ பறிமுதல் செய்ததுடன், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.