பாஜகவின் அவசர மனு பாஜகவின் அவசர மனு மீது நாளை விசாரணை நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னையில் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கும் ஃபார்முலா 4 கார் பந்தயத்தை நிறுத்தக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், பாஜக செய்தி தொடர்பாளர் B.N.S. பிரசாத் இன்று பிற்பகலே விசாரிக்க வேண்டும் என அவசர மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இந்த அவசர மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு, நாளை இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், சென்னை ஃபார்முலா 4 கார் பந்தயம் தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா ? என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த வழக்கில், சென்னை நகரின் மையப்பகுதியில் கார் பந்தயத்தை நடத்துவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், சத்தம் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு போன்ற பிரச்சினைகள் குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பூந்தமல்லி அருகே ஏற்கனவே கார் பந்தய தளம் இருக்கும் நிலையில், சென்னையின் மையப்பகுதியில் இந்த பந்தயத்தை நடத்துவதற்கான அவசியம் என்ன என்பது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.