பிஜே மருத்துவக் கல்லூரி அருகே நிகழ்ந்த விமான விபத்து நாட்டை உலுக்கியுள்ளது. சம்பவம் நடந்ததும், 56 வயதான கட்டுமான தொழிலதிபர் ராஜு படேல், எந்த தயக்கமும் இன்றி தனது குழுவுடன் ஐந்து நிமிடங்களுக்குள் சம்பவ இடத்திற்கு விரைந்தார். தீப்பிழம்புகள் எழுந்து, புகையால் மூடிய அந்தப் பகுதியில், அவர் செய்த மனிதாபிமானச் செயல்கள் அனைவரின் பாராட்டைப் பெற்றுள்ளன.

ராஜு படேல் கூறியதாவது: “முதல் 15 முதல் 20 நிமிடங்கள் நாங்கள் அருகில் செல்ல முடியவில்லை. தீ பளபளவென்று எரிந்தது. முதல் தீயணைப்பு வீரர்கள் வந்ததும், 108 ஆம்புலன்ஸ் வந்து சேர்ந்ததும், நாங்கள் காயமடைந்தவர்களை சேலைகள், படுக்கை விரிப்புகள் கொண்டு தூக்கிச் சென்றோம். ஸ்ட்ரெச்சர்கள் எதுவும் அந்த நேரத்தில் இல்லை.

மாலை 4 மணிக்கு மீட்பு பணி சற்று குறைந்த நிலையில், சிதறிய பைகள், பெட்டிகளை தேடி 700 கிராம் தங்க நகைகள், ரூ.80,000 ரொக்கம், பாஸ்போர்ட், பகவத்கீதை புத்தகம் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன. இவை அனைத்தையும் அதிகாரிகளிடம் ஒப்படைத்ததாக ராஜு படேல் தெரிவித்தார். அதிகாரிகள் இரவு 9 மணி வரை அவர்களை  உதவ அனுமதித்தனர்.

இந்த சம்பவத்தில் சேகரிக்கப்பட்ட பொருட்கள், ஆவணங்கள் அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டு, மரணமடைந்தவர்களின் உறவினர்களிடம் விரைவில் ஒப்படைக்கப்படும் என்று உள்துறை இணையமைச்சர் ஹர்ஷ் சங்கவி உறுதியளித்தார்.