பாகிஸ்தானுடனான பல்லாண்டு கால உறவிலும், ராஜதந்திர ரீதியிலும் மிக முக்கியமான திருப்புமுனையாக ஒரு பெரும் நிகழ்வு அரங்கேறியுள்ளது. கடந்த 1960-ஆம் ஆண்டு உலக வங்கியின் அனுசரணையில் கையெழுத்தான வரலாற்றுச் சிறப்புமிக்க ‘சிந்து நதி நீர் ஒப்பந்தம்’ தற்போது கடுமையான சோதனைக் காலத்தை எதிர்கொண்டுள்ளது. நெதர்லாந்து நாட்டின் ஹேக் நகரில் அமைந்துள்ள சர்வதேச நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பை இந்தியா அதிரடியாகத் தள்ளுபடி செய்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் பகல்காம் பகுதியில் கடந்த 2025 ஏப்ரல் மாதம் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடன் நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா இடைநிறுத்தம் செய்தது. ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக ஹேக் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், இந்தியாவின் இந்த முடிவு சட்டப்படி செல்லாது என்றும், 1960-ஆம் ஆண்டு ஒப்பந்தம் தொடர்ந்து முழுமையாக அமலில் இருப்பதாகவும் நடுவர் மன்றம் ஒருமனதாகத் தீர்ப்பளித்தது.

மேலும், ரத்லே நீர்மின் திட்டம் தொடர்பான இடைக்கால உத்தரவையும் பிறப்பித்த அந்த மன்றம், மேற்கு நதிகளான சிந்து, ஜீலம் மற்றும் செனாப் நதிகளில் இந்தியா தனது கடமைகளைத் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. ஆரம்பம் முதலே இந்த நடுவர் மன்றத்தின் மீது சட்டப்பூர்வமான நியாயமான கேள்விகளை எழுப்பி வரும் இந்தியா, இந்தத் தீர்ப்பை முற்றிலுமாகப் புறக்கணித்துள்ளது.

 

நடுவர் மன்றம் “சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளது” என்ற தனது நிலைப்பாட்டை இந்தியா மீண்டும் திட்டவட்டமாக உறுதிப்படுத்தியுள்ளது. தொழில்நுட்ப ரீதியான தகராறுகள் மற்றும் பிரச்சினைகள் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரிசை முறைப்படி ‘நடுநிலை நிபுணர்’செயல்முறை மூலமாகவே தீர்க்கப்பட வேண்டுமே தவிர, இதுபோன்று இணையான நடுவர் மன்ற நடவடிக்கைகள் மூலம் அல்ல என்பதே இந்தியாவின் வலுவான வாதமாகும்.

இதன் காரணமாக, நடுவர் மன்றத்தின் அனைத்து நடவடிக்கைகளும், தீர்ப்புகளும் தனக்குக் கட்டுப்படுத்தக் கூடியவை அல்ல என்றும், அவை செல்லாது என்றும் இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதை நம்பகமான மற்றும் மாற்ற முடியாத அளவுக்கு முழுமையாக நிறுத்தாத வரை, 2025 ஏப்ரலில் தொடங்கப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் இடைநிறுத்தம் தொடரும் என்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

கிழக்கு நதிகள் இந்தியாவுக்கும், மேற்கு நதிகள் பாகிஸ்தானுக்கும் எனப் பகிர்ந்து அளிக்கப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நதி நீர் ஒப்பந்தம், கடந்த ஆறு தசாப்தங்களாக பிராந்திய ஸ்திரத்தன்மையின் மூலக்கல்லாகக் கருதப்பட்டு வந்தது. ஆனால், கிஷன்கங்கை மற்றும் ரத்லே நீர்மின் திட்டங்களின் வடிவமைப்பு குறித்த பாகிஸ்தானின் முறையீடுகளும், இந்தியாவின் தற்காப்பு நடவடிக்கைகளும் இந்த விவகாரத்தை ஒரு சிக்கலான சட்டப் போராக மாற்றியுள்ளவை. நடுவர் மன்றத்தில் இந்தியா பங்கேற்காத நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே நீடித்து வரும் இந்த முட்டுக்கட்டை சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், பிராந்தியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.