ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஊக்குவித்து வரும் பாகிஸ்தானின் சதித்திட்டத்தை, அந்த நாட்டைச் சேர்ந்த ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் துணை கமாண்டர் ஷம்ஷேர் கான் தற்போது தோலுரித்துக் காட்டியுள்ளார்.

சர்வதேச அரங்கில் தீவிரவாதத்திற்கு எதிராகச் செயல்படுவது போல் பல ஆண்டுகளாக நாடகமாடி வரும் பாகிஸ்தானின் முகத்திரையைக் கிழிக்கும் வகையில் ஷம்ஷேர் கானின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், காஷ்மீரில் உள்ள ஒவ்வொரு சுடுகாட்டிலும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் உடல்கள்தான் புதைக்கப்பட்டுள்ளதாக அவர் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.

வடக்கே உள்ள குப்வாரா தொடங்கி தெற்கே உள்ள கதுவா வரை காஷ்மீரின் அனைத்துப் பகுதிகளிலும் தங்கள் நாட்டைச் சேர்ந்த தீவிரவாதிகள் இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ளனர் என அவர் அந்த வீடியோவில் விரக்தியுடன் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், எல்லையைத் தாண்டி பாகிஸ்தான் தனது நாட்டுப் பிரஜைகளைத் தீவிரவாதிகளாக மூளைச்சலவை செய்து இந்தியாவுக்குள் ஊடுருவச் செய்கிறது என்பது உலக நாடுகளின் மத்தியில் அதிகாரப்பூர்வமாக அம்பலமாகியுள்ளது.

பல ஆண்டுகளாக இந்தியா முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளுக்கும், பயங்கரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் போன்ற அதிரடி நடவடிக்கைகளுக்கும் இந்த வைரல் வீடியோ தற்போது வலுவான ஆதாரமாக அமைந்துள்ளது.