
தர்மபுரி மாவட்டம் பூத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாப்பாத்தியம்மாள்(90). இவருக்கு முருகேசன், கோவிந்தன் என்ற இரண்டு மகன்களும், வள்ளியம்மாள் என்ற மகளும் உள்ளனர். புதுப்பட்டி கிராமத்தில் தனியாக வாழ்ந்த பாப்பாத்தியம்மாள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வயது மூப்பு காரணமாக தன்னை கவனித்துக் கொள்ள முடியாமல் பெற்ற மகளையும் நாடியுள்ளார்.
கடந்த மாதம் கோவிந்தராஜ் தனது தாயை கவனிக்க முடியாமல் ஆட்டோவில் அழைத்து வந்து சாலையோரம் இறக்கிவிட்டு சென்றுள்ளார். அடுத்த நாள் அந்த வழியாக சென்ற முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முருகன் என்பவர் பாப்பாத்தியம்மாளை மீட்டு ஒரு மாதமாக அடைக்கலம் தந்து உணவு கொடுத்து வந்தார்.
வயது மூப்பு காரணமாக பாப்பாத்தியம்மாள் தனது பிள்ளைகளுடன் சேர ஆசைப்பட்டுள்ளார். அவரது விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக கிராம மக்கள் ஒன்று சேர்ந்து மகேந்திரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் போலீசார் ஒரு மாதமாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது.
நேற்று வெள்ளிச்சந்தை நான்கு ரோடு பகுதியில் கட்டில் போட்டு மூதாட்டியை அமர வைத்து பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிள்ளைகளுடன் மூதாட்டியை சேர்க்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன் பிறகு மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.