மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்திலுள்ள விக்டோரியா அரசு மருத்துவமனையில், பெண் ஒருவர் வார்டுக்குள் அமர்ந்து மது அருந்தும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மருத்துவமனையின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு முறைகளைக் கேள்விக்குள்ளாக்கும் இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜபல்பூர் மாவட்ட மருத்துவமனையில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த வைரல் வீடியோவில், பெண் ஒருவர் மருத்துவமனை வார்டுக்குள் தரையில் அமர்ந்து பாட்டிலிலிருந்து நேரடியாக மது அருந்துவது பதிவாகியுள்ளது. தகவல்களின்படி, அந்தப் பெண்ணின் மகன் மருத்துவமனையின் எலும்பியல் வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் வேறு ஒரு வார்டிற்குச் சென்று இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.

பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களின் கண்ணில் படாமல் எப்படி மதுபானம் வார்டுக்குள் கொண்டு வரப்பட்டது என்பது குறித்தும், எப்படி என்று கடுமையான கேள்விகள் எழுந்துள்ளன. இந்தச் சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடமிருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை.

இது போன்ற ஒரு சம்பவம் இதற்கு முன்பும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள சாகர் மாவட்ட அரசு மருத்துவமனையில் பதிவாகியுள்ளது. அங்கு ஒரு வார்டில் நோயாளி ஒருவர் மருத்துவமனை படுக்கைக்கு அடியில் அமர்ந்து மது அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது குறிப்பிடத்தக்கது. மேலும்  இதுபோன்ற தொடர்ச்சியான சம்பவங்கள் அரசு மருத்துவமனைகளின் பாதுகாப்பு ஏற்பாடுகளை மக்கள் மத்தியில் கடும் விமர்சனத்திற்குள்ளாக்கியுள்ளன.