தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாளமுத்துநகர் டி.சவேரியார் புரத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமண நிகழ்வு நடந்து கொண்டிருந்தது. அப்போது திருமண விழாவில் கத்தி, அரிவாளுடன் 3 இளைஞர்கள் சென்று ரகளை செய்து ஆட்டம் போட்டனர். பின்னர் அங்கிருந்து சென்று சேதுபாதை சாலையில் வரும் வாகனங்களை வழிமறித்து பணம் கேட்டு மோசடியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் பெயரில் தாளமுத்து நகரின் இன்ஸ்பெக்டர் அருளப்பன், சப் இன்ஸ்பெக்டர் மகாராஜா மற்றும் காவலர்கள் விரைந்து சென்று அப்பகுதியில் விசாரணை நடத்தினர். அப்போது அந்தப் பகுதியில் 3 இளைஞர்கள் கத்தி அரிவாளுடன் சுத்திக் கொண்டிருந்ததை பார்த்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வருவதைக் கண்ட மூன்று பேரும் அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்தனர். ஆனால் காவல்துறையினர் துரத்திச் சென்று மூன்று பேரையும் மடக்கி பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அதன் பின் அவர்களிடம் நடத்திய விசாரணையில் தாளமுத்து நகரை சேர்ந்த ஆல்பர்ட் தமிழரசன், தருண்குமார், சண்முகராஜா ஆகியோர் என்பது தெரிய வந்தது.

மேலும் இவர்கள் மீது ஏற்கனவே கொலை மற்றும் கொலை முயற்சி, கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது. இதனை அடுத்து மூன்று பேர் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.