சென்னை மாவட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் கடந்த ஜூன் 24ஆம் தேதி விடுதலை சிறுத்தை கட்சிகளின் 2025 ஆம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

அந்த விழாவில் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பல கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அந்த நிகழ்வில் நடிகர் சத்யராஜுக்கு பெரியார் ஒளி விருது வழங்கப்பட்டது.

இதனை அடுத்து நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சத்யராஜ் கூறியதாவது, சாதியை வைத்து தமிழ் தேசியம் எப்படி சாத்தியமாகும். ஏன் ஆணவக் கொலை நடக்கிறது?, ஒரு தமிழனை இன்னொரு தமிழன் ஏன் வெட்டுகிறான்?, சாதி ஒழியாமல் எப்படி தமிழ் தேசியம் மலரும்?.

நமது முக்கியக்கொள்கையே சாதி ஒழிப்பு, தமிழ் தேசியம் தான். கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்பது நமக்கு பிரச்சனை இல்லை. இதேபோன்று பெரியாரிடம் ஒருவர் ஆத்திகத்துக்கும், நாத்திகத்துக்கும் வித்தியாசம் கேட்டார்.

அதற்கு பதில் அளித்த தந்தை பெரியார், கோவிலில் கடவுள் சிலைக்கு முன்னாடி ஒரு உண்டியல் வைக்கிறார்கள் அதற்கு பெயர் ஆத்திகம். ஆனா அந்த கடவுளையே நம்பாமல் அந்த உண்டியலுக்கு பூட்டு போடுறீங்க அதுக்கு பெயர் நாத்திகம் என கூறினார்.

அதேபோன்றுதான் முருகனுக்காக ஒரு மாநாடு நடத்தி இவர்களை ஏமாற்றி விட்டோம் என்று நினைக்கிறார்கள். ஆனால் முருகன் உங்களை ஏமாற்றி விடுவார், என கூறினார்.