
தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அருவியில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைகின்றனர்.
இந்நிலையில் குற்றாலத்திற்கு அருகே நீர்வரத்து சீராக உள்ள ஒரு அருவி உள்ளது. இந்த அருவி கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. தென்காசி மாவட்டத்திலிருந்து அச்சன்கோவில் செல்லும் சாலையில் அமைந்துள்ள மணலாறு அருவியில் பொதுமக்கள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்த அருவி கேரள வனத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அருவிக்கு செல்லும் பொதுமக்கள் மது பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அருவியை காண வரும் சுற்றுலா பயணிகளுக்கு நபர் ஒருவருக்கு ரூ. 50 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.