டெல்லி நீதிமன்றம், விவாகரத்துக்குப் பின்னர் பணம் பெற்றுவிட்டு மீண்டும் கணவருக்கு எதிராக குற்றவியல் வழக்கு தொடர்ந்த பெண் மீது, தானாகவே நடவடிக்கை எடுத்து உள்ளது. இதுதொடர்பாக, நீதிபதி அனம் ரெய்ஸ் கான், “இத்தகைய செயல்கள் சட்ட முறையைக் கெடுக்கக்கூடியவை. இதை ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டியது அவசியம்” எனக் கடுமையாக தெரிவித்தார்.

விவாகரத்து ஒப்பந்தத்தின் கீழ், பெண்ணுக்கு ₹19 லட்சம் வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதில் ₹10 லட்சத்தை பெற்ற பெண், மீதமுள்ள தொகையை எதிர்பார்க்காமல் கணவருக்கு எதிராக தனியாக ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால் அவர், இந்த விவகாரத்தை குடும்ப நீதிமன்றத்தில் ஏற்கனவே தீர்வு கண்டதையும், ₹10 லட்சத்தை பெற்றதையும் முற்றிலும் மறைத்திருந்தார். இது நீதிமன்றத்துக்கு பொய்யான உறுதி மொழி அளித்ததற்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

இந்த நிலையில், குறித்த பெண்ணுக்கு எதிராக இந்திய குற்ற வழக்குகள் சட்டத்தின் பிரிவு 340 மற்றும் 195(1)(b) படி தனி வழக்கு தொடங்கப்பட்டுள்ளது. இது தவிர, கணவர் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த அவமதிப்பு வழக்கில், பெண் பணம் பெற்றதையும் ஒப்புக்கொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இந்த தகவல்களின் அடிப்படையில், சட்டத்தின் தவறான பயன்பாடாக இச்செயல் வரையறுக்கப்படுகிறது என நீதிமன்றம் கருதியுள்ளது.

நீதிமன்றம், பெண்ணிடம் எதிர்வரும் ஜூன் 30-ஆம் தேதி விசாரணைக்காக பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில், புகார் தரப்பை வழக்குரைஞர் மனோஜ் குமார் பிரதிநிதித்துவம் செய்தார். கணவர் சார்பில் வழக்குரைஞர் கிரிதரி சிங் முன்னிலையிலிருந்தார். இந்த விவகாரம், பெண்கள் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட சட்டங்களை சிலர் துஷ்பயன்படுத்துகிறார்களா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது.