விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ளார். இவர் அடுத்த மாதம் 19 ஆம் தேதியில் பூமிக்கு திரும்புவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியா வம்சாவளியை சேர்ந்தவரும் நாசா விஞ்ஞானியுமான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த புட்ச் விலோர் ஆகிய இருவரும் கடந்த ஜூன் 5ஆம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றனர். அவர்கள் பயணித்த போயின் நிறுவனத்தின் ஸ்டார் லைனர் விண்கலனில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக இருவரும் விண்வெளி மையத்தில் சுமார் 6 மாத காலத்திற்கும் மேலாக உள்ளனர். 8-ம் நாள் பயணத் திட்டத்துடன் விண்வெளி நிலையத்திற்கு சென்ற அவர்கள் தற்போது வரை மீட்கப்படவில்லை. இவர்கள் இருவரையும் பூமிக்கு அழைத்து வர நாசா பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றது. இந்நிலையில் அடுத்த மார்ச் மாதத்தின் பிற்பாதியில் தான் அவர்கள் பூமிக்கு திரும்புவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 12-ம் தேதி ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் பூமியிலிருந்து புறப்படுகின்றது. அந்த விண்கலன் மூலம் 19-ம் தேதி அன்று இருவரும் அங்கிருந்து புறப்படுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.