
உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் 2024 டி20 கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முன்னாள் வீரர்கள் விளையாடுவார்கள். இதன் இறுதிப்போட்டி நேற்று இரவு பர்மிங்காம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் யுவராஜ் சிங் தலைமையிலான இந்திய அணியும் மற்றும் யூனிஸ்கான் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதியது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது. இந்த அணியில் அதிகபட்சமாக சோயப் மாலிக் 41 ரன்கள் வரை எடுத்திருந்த நிலையில் இந்தியா தரப்பில் அனுரீத் சிங் 3 விக்கெட்டுகள் வரை வீழ்த்தினார். இதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 19.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்று கோப்பையை வென்றது. மேலும் இந்தியா தரப்பில் அதிகபட்சமாக அம்பத்தி ராயுடு 50 ரன்களும், யூசுப் பதான் 30 ரன்களும் எடுத்திருந்தனர்.