விஜயகாந்த் மறைவிற்கு பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி, பிரதமர் மோடி உள்ளிட்ட தேசிய அரசியல் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்..

சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் மறைவு தமிழ் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட விஜயகாந்த் நுரையீரல் அழற்சி (நிமோனியா) காரணமாக வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை காலமானார்.

இதையடுத்து சாலிகிராமத்தில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உடலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு முழு அரசு மரியாதை அளிக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதனைத்தொடர்ந்து சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் இருந்து விஜயகாந்த் உடல் வடபழனி வழியாக அலுவலகத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அஞ்சலிக்காக விஜயகாந்தின் உடல் வைக்கப்படுள்ளது.  இதனிடையே இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் பலரும் கண்ணீருடன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரியங்கா காந்தி இரங்கல் :

இந்நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், மாபெரும் கலைஞன், மக்கள் நாயகன், பொன் நெஞ்சம் கொண்ட மனிதரான ‘கேப்டன்’ விஜயகாந்த் என்றென்றும் மரியாதையுடனும், போற்றுதலுடனும் நினைவுகூரப்படுவார். அவரது குடும்பத்தினருக்கும், அவரை நேசித்த மற்றும் நம்பிய அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

ராகுல் காந்தி இரங்கல் :

அதேபோல காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி விஜயகாந்த் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில், தேமுதிக நிறுவனர் திரு விஜயகாந்த் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். சினிமா மற்றும் அரசியலுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் அழியாத தடம் பதித்துள்ளது. இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்..

பிரதமர் மோடி இரங்கல் :

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில், திரு விஜயகாந்த் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தமிழ் திரையுலகின் ஜாம்பவான், அவரது கவர்ச்சியான நடிப்பு மில்லியன் கணக்கானவர்களின் இதயங்களைக் கவர்ந்தது. ஒரு அரசியல் தலைவராக, தமிழ்நாட்டின் அரசியல் நிலப்பரப்பில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்திய அவர், பொது சேவையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.

அவரது மறைவு ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்துகிறது, அது நிரப்ப கடினமாக இருக்கும். அவர் நெருங்கிய நண்பராக இருந்தார், பல ஆண்டுகளாக அவருடனான எனது தொடர்புகளை நான் அன்புடன் நினைவுகூர்கிறேன். இந்த சோகமான நேரத்தில், எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் ஏராளமான பின்தொடர்பவர்களுடன் உள்ளன. ஓம் சாந்தி” என பதிவிட்டுள்ளார்.

அமித்ஷா இரங்கல் :

உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் பக்கத்தில், தேமுதிக தலைவரும், தமிழ் திரையுலகில் மூத்த நடிகருமான விஜயகாந்த் அவர்களின் மறைவு குறித்து அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். கேப்டன் என்று அன்புடன் அழைக்கப்படும் விஜயகாந்த் அவர்கள் தனது திரை மற்றும் ஆஃப்ஸ்கிரீன் பாத்திரங்கள் மூலம் மக்களிடையே தேசபக்தியை தூண்டினார். அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் ஷாந்தி ஷாந்தி.

பாஜக தலைவர் ஜேபி நட்டா இரங்கல் :

பாஜக தலைவர் ஜேபி நட்டா தனது எக்ஸ் பக்கத்தில், மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் நடிகருமான திரு விஜயகாந்த் அவர்களின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. திரைப்படத் தயாரிப்பிலும் பொதுச் சேவையிலும் மிகுந்த ஆர்வம் கொண்ட அவர், இந்தத் துறைகளில் குறிப்பிடத்தக்க முத்திரையைப் பதித்தார். மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கான அவரது நேர்மையான அர்ப்பணிப்பு மற்றும் அர்ப்பணிப்புக்காக அவர் நினைவுகூரப்படுவார்.

துயரத்தின் இந்த நேரத்தில் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே இரங்கல் :

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தனது எக்ஸ் பக்கத்தில், தேமுதிக நிறுவனரும், தலைவருமான கேப்டன் விஜயகாந்தின் மறைவு எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. ஒரு சிறந்த நடிகரும், மக்களால் பெரிதும் போற்றப்பட்ட ஒரு தலைவரும், தமிழ்நாட்டின் சமூக மற்றும் அரசியல் அதிகாரத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தினர், நண்பர்கள், அபிமானிகள் மற்றும் பின்பற்றுபவர்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள்.