பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் மைசூரில் இருந்து தர்பங்கா நோக்கி சென்றது. நேற்று இரவு கவுரவபேட்டை ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 19 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் இரண்டு ரயில்களும் தடம் புரண்டது. தற்போது ஊழியர்கள் ரயில் பெட்டிகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே படுகாயம் அடைந்த நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சூ.வெங்கடேசன் எம்பி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஆறு நாட்களுக்கு ஒரு விபத்து நடக்கிறது. ஒவ்வொரு விபத்தின் போதும் நடைபெறுவது ஆய்வுகள் மட்டும் தான். ஆய்வின் முடிவுகளை கொண்டு தீர்வுகளை எப்போது உருவாக்குவீர்கள்? உயிர் சேதம் இல்லாத பெரும் நிம்மதி இருந்தாலும் ஒவ்வொரு ரயில் பயணத்தையும் நிம்மதி இல்லாத பதட்டத்தை நோக்கி தள்ளும் சூழலில் இருந்து மீள ரயில்வேத்துறை என்ன தான் செய்யப் போகிறது என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளார்.