மத்திய பிரதேசத்தில் உள்ள ரீபா மாவட்டத்தில் சைனிக் என்ற பள்ளி செயல்பட்டு வருகிறது.இந்தப் பள்ளியில் படித்து வரும் 5 மாணவர்கள் அப்பகுதி கூடுதல் கலெக்டர் ஸ்வப்னா திரிபாரதியிடம் புகார் ஒன்றை தெரிவித்துள்ளனர். இந்த புகாரில், தங்களது பள்ளியில் உள்ள ஆசிரியர் வாகனம் சேதமடைந்ததால் எங்களின் முழு வகுப்பையும் இடைநீக்கம் செய்துள்ளார் என தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து கலெக்டர் திரிபாரதி, மாணவர்களுக்கு விரைவில் தேர்வுகள் இருப்பதால் பள்ளி நிர்வாக அதிகாரி மற்றும் முதல்வருடன் பேசி இந்த பிரச்சனையை தீர்த்து வைப்பதாக உறுதி அளித்து மாணவர்களை அனுப்பி வைத்துள்ளார்.

இதுகுறித்து விசாரித்த போது மாணவர்கள் கிரிக்கெட் விளையாடும் போது ஆசிரியரின் வாகனத்தில் பந்துப்பட்டு சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கலெக்டர், சைனிக் பள்ளியின் முதல்வர் அவிநாசியிடம் தொடர்பு கொண்டு பேசியபோது முதல்வர் இந்த பிரச்சனை குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் பள்ளியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.