
மத்தியபிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள பீகா காலனி 12ல் நரேந்திர சிங் சௌஹான் (47), சீமா சௌஹான் (42) என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஆதித்யா (22) என்ற மகன் இருந்துள்ளார். நரேந்திரன் முனிசிபால் கார்ப்பரேஷன் ஒப்பந்ததாரராகவும், ஆர்எஸ்எஸ் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று 10 ஆண்டுகளாக குடும்பத்திற்கு சமையல்காரராக பணியாற்றிய சந்தோஷ் என்பவர் இரவு சமைத்து முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பின் மறுநாள் வழக்கம்போல் வேலை இருக்கு வந்துள்ளார். ஆனால் நரேந்திர சிங் அவரை அழைக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த சந்தோஷ், அவரது தங்கைக்கு போன் செய்து கூறியுள்ளார்.
இதையடுத்து இருவரும் வீட்டிற்கு வந்து கதவைத் திறந்து பார்த்தபோது 3 பேரும் இறந்து கிடந்தனர். இதனை பார்த்து அதிரிச்சியடைந்த அவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி விரைந்து வந்த காவல் துறையினர் அவர்கள் 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது சீமாவின் உள்ளங்கையில் “எங்கள் இறப்புக்கு என் சகோதரர் தான் காரணம்” என்று எழுதப்பட்டிருப்பதை காவல்துறையினர் கண்டனர்.
இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். முதல் கட்ட விசாரணையில், அரசு ஊழியர் முதலில் தனது மனைவி மற்றும் மகனை கொன்றுவிட்டு, தன்னைத் தானே சுட்டுக் கொண்டதாக கூறுகின்றனர். அதோடு நரேந்திரனுக்கும், அவருடைய மைத்துனருக்கும் இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகப்படுகின்றனர்.