ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் உள்ள கன்வாஸ் – தர்ரா சாலையில் சுரேஷ் என்பவர் வைக்கோல் ஏற்றப்பட்ட டிராக்டரை ஓட்டிச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது குறுக்கே வந்த ஒரு பைக்கை காப்பாற்ற முயன்றபோது, நிலைதடுமாறிய டிராக்டர் தலைகீழாகக் கவிழ்ந்தது. இதில் டிரைவர் சுரேஷ் டிராக்டரின் கனமான இன்ஜின் பகுதிக்கு அடியில் சிக்கிக் கொண்டார்.

அரை மணி நேரமாக டிராக்டரின் எடைக்கு அடியில் நசுங்கிக் கொண்டிருந்த நிலையிலும், சுரேஷ் தனது மன உறுதியை இழக்காமல் உதவிக்காகக் கூச்சலிட்டார்.

அவரது குரலைக் கேட்டு ஓடி வந்த கிராம மக்கள், டிராக்டரைத் தூக்க முயன்றனர். ஆனால், அது முடியாத காரியம் என்பதால் உடனடியாக போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ராட்சத கிரேன் (Crane) இயந்திரத்தை வரவழைத்தனர். கிரேனின் உதவியுடன் டிராக்டர் தூக்கப்பட்டதும், அடியில் சிக்கியிருந்த சுரேஷ் பத்திரமாக மீட்கப்பட்டார்.

படுகாயமடைந்த அவர் உடனடியாக கன்வாஸ் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.