கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில வருடங்களாக திருட்டு கும்பல் ஒன்றை காவல்துறையினர் தேடிவந்த நிலையில் தற்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதன்படி உதவி காவல் கண்காணிப்பாளர் லலித் குமார் தலைமையில் காவல்துறையினர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் பெண்கள் மற்றும் வயதானவர்களை குறிவைத்து செயின், பர்ஸ் போன்றவற்றை திருடி வந்த கும்பல் பிடிபட்டது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மஞ்சு, அரவிந்த், விஜயா என்பது தெரிய வந்தது. அவர்களை கைது செய்த காவல் துறையினர் அவர்களிடமிருந்த 27 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் போக்சோ மற்றும் பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பல முயற்சிகளை எடுத்து வரும் நிலையில் அப்பகுதி மக்கள் அவரை பாராட்டி வருகிறார்கள்.