
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேவிக்கோடு இடைக்கோடு பகுதியை சேர்ந்தவர் கிங்ஸ்லி (45). இவர் அப்பகுதியில் உள்ள ஆலயத்தில் மத போதகராக உள்ளார். அவருடைய மனைவி சஜினி. இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகனும், 3 வயதில் ஒரு மகனும், 8 மாதத்தில் ஒரு மகளும் உள்ளனர்.
வழக்கம்போல நேற்று ஊழியத்துக்கு சென்று வீடு திரும்பிய கிங்ஸ்லியும், அவரது மனைவியும் தங்களது குழந்தைகள் பக்கத்து வீட்டில் விளையாடிக் கொண்டிருந்ததை பார்த்தனர். இதனால் கோபமடைந்த கிங்ஸ்லி 3 குழந்தைகளையும் இழுத்து வந்து கயிற்றால் கட்டி சரமாரியாக அடித்துள்ளார்.
இதனை பார்த்து பதறிய பக்கத்து வீட்டுக்காரர் கருங்கல் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 3 குழந்தைகளையும் மீட்டனர். அதன் பின் கிங்ஸிலியை கைது செய்து அவரிடம் நடத்திய விசாரணையில் கிங்ஸ்லி கூறியதாவது, நாங்கள் தினமும் ஊழியத்திற்கு செல்லும் போது குழந்தைகளை வீட்டில் பூட்டிவிட்டு செல்வோம்.
ஆனால் நேற்று வீட்டுக்கு வந்த போது வீட்டில் குழந்தைகள் இல்லை. அவர்கள் பக்கத்து வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தனர். அதனால் அவர்களது உடம்பில் சாத்தான் புகுந்து விட்டது. அதனை விரட்டவே கயிற்றால் கட்டி வைத்து அடித்தேன் என கூறியுள்ளார்.
இதனை அடுத்து கிங்ஸ்லி மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். மேலும் 3 குழந்தைகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து காப்பகத்தில் சேர்த்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெறும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.