
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் தாலுகா பத்மநாபமங்கலம் பகுதியில் பேச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவப்பண்டாரம் (21). இவர் பைக்கில் செல்லும் போது ஏற்பட்ட விபத்தால் படுகாயம் அடைந்தார். அவருக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அங்கிருந்து கடந்த ஜூன் 16ஆம் தேதி அன்று திருநெல்வேலி மடுத்துக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், மூளையில் அதிகப்படியான ரத்தக் கசிவு இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
இதனை அடுத்து கடந்த ஜூன் 17ஆம் தேதி அன்று அவரது மூளையின் செயல்பாடுகள் முழுவதுமாக நின்றதால் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர்.
அதன் பின் அவரது ஒரு சிறுநீரகத்தை திருநெல்வேலி மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகத்தை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கும் கல்லீரலை மதுரை மிஷன் மருத்துவமனைக்கும், கார்னியாசை திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் தானமாக கொடுக்கப்பட்டது.
இறந்த பின்னரும் அவரது உடல் தானமாக வழங்கப்பட்டதை அடுத்து மருத்துவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் சிவப்பண்டாரத்தின் உடலை தகுந்த மரியாதை செலுத்தி அடக்கம் செய்தனர். இச்சம்பவம் காண்போரை கண் கலங்க செய்தது.