
சென்னை மாவட்டத்தில் உள்ள அரும்பாக்கம் பகுதியில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த தகவலின் படி காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு போதைப் பொருள் கடத்தல் கும்பலை கைது செய்தனர். இதில் வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த ரவி (47), கணேசன் (50), திருவள்ளுூரைச் சேர்ந்த மதன் (45) ஆகிய மூன்று நபர்கள் அரும்பாக்கம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு அவர்களிடம் உள்ள 38 கிலோ மெத்தமெட்டைன், ரூபாய் 51 லட்சம்,105 கிராம் தங்க நகை,2 செல்போன்,2 பாஸ்போர்ட், பைக்குகள் முதலியன பறிமுதல் செய்யப்பட்டது.
இவை அனைத்தும் சென்னையில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த போதைப் பொருட்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தனிப்படை அமைத்து தீவிர விசாரணையில் இறங்கிய காவல்துறை அடுத்து 2 நபர்கள் சிட்லப்பாக்கம் பகுதியை சேர்ந்த ராஜா(45) மற்றும் சாலிகிராமம் பகுதியை சேர்ந்த சத்தியசீலன் (36) ஆகிய இருவரை அடுத்தடுத்து கைது செய்தது.
அவர்களிடமிருந்து 4 கிலோ போதை பொருள், 5 துப்பாக்கிகள், 79 தோட்டாக்கள், கார் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதனை அடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் இவர்கள் வடமாநிலத்தில் இருந்து துப்பாக்கிகளை வாங்கி இலங்கை போன்ற நாடுகளுக்கு கடத்த திட்டமிட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மேலும் காவல்துறையினர் தனிப்படை அமைத்து, போதைப்பொருள் சர்வதேச கும்பலுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.