உத்தரபிரதேசத்தில் உள்ள லக்னோவிலுள்ள ஆலம்பாக் பகுதியில், 3 வயது சிறுமி மீது பாலியல் வன்கொடுமை நடந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் கொடூரச் செயலை செய்த 32 வயதான தீபக் வர்மா என்ற நபர், 24 மணி நேரத்துக்குள் போலீசாரால் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இச்சம்பவம் கடந்த புதன்கிழமை இரவு நிகழ்ந்தது. உன்னாவ்வைச் சேர்ந்த ஒரு குடும்பம், ஆலம்பாக் மெட்ரோ நிலையம் அருகே நடைபாதையில் தங்கள் 3 வயது மகளுடன் தூங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது தீபக் வர்மா, சிறுமியை தூக்கிச் சென்று மெட்ரோ லிப்டில் துன்புறுத்தினார். இதனால் அந்தரங்க உறுப்புகளில் உள் காயங்கள் ஏற்பட்ட சிறுமி, வலி தாங்க முடியாமல் கதறி அழுததால், அருகில் இருந்த ஒருவர் பெற்றோரை எழுப்பினார்.

சிறுமியின் நிலையை பார்த்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, தற்பொழுது லக்னோவின் கே.ஜி.எம்.யு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக 300க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் சோதனை செய்யப்பட்டு, தீபக்கை 5பேர் கொண்ட  போலீஸ் குழு தீவிரமாக  தேடி வந்தனர். மேலும் குற்றவாளியின்  ஸ்கூட்டியின் எண்ணும் கண்காணிக்கப்பட்டது.

தீபக் வர்மாவை தகவல்கள் அளிப்பவருக்கு  ரூ.1 லட்சம் வெகுமதி வழங்க அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஐஷ்பாக் பகுதியில் போலீசாருக்கும், தீபக் வர்மாக்கும்  ஏற்பட்ட மோதலில் அவர் என்கவுன்டரில் கொல்லப்பட்டார்.

மேலும் தீபக், ரயில்வே தண்ணீர் வழங்குநராகவும், மத நிகழ்ச்சிகளில் அலங்கார ஊர்திகள் ஓட்டுபவராகவும் பணியாற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கொடூர சம்பவம் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது.