பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பெஹோவா-குருக்ஷேத்ரா தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் சுவர் கட்டி சாலையை ஆக்கிரமித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், இந்த சாலை தங்களுடைய நிலத்தில் கட்டப்பட்டதாகவும், நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து வெற்றி பெற்றும் அரசு இழப்பீடு வழங்காததால், மனமுடைந்த நிலையில் அவர்கள் இந்த நடவடிக்கையை எடுத்ததாக கூறுகின்றனர்.

இது குறித்து அறிந்த நைப் தாசில்தார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விவசாயிகளை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் விவசாயிகள் சாலையை விட்டு விட மறுத்ததால், 2-3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் சாலையில் இருந்து செங்கற்கள் அகற்றப்பட்டு, போக்குவரத்து மீண்டும் இயல்பான நிலைக்கு திருப்பப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

விவசாயி பால்விந்தர் சிங் கூறுகையில், 1987-ஆம் ஆண்டு தனது 22 மர்லா நிலத்தில் பொதுப்பணித்துறை சாலை அமைத்ததாகவும், 2006 முதல் 2023 வரை 3 முறை நீதிமன்றத்தில் வழக்குகள் வென்றும், இழப்பீடு வழங்கப்படவில்லையெனவும் தெரிவித்தார்.

மேலும் நீதிமன்றம் 6 மாதங்களில் இழப்பீடு வழங்க வேண்டும் அல்லது சாலையை அகற்ற வேண்டும் என்று 2013-இல் உத்தரவிட்டதையும், பின்னர் உயர் நீதிமன்றம், அமர்வு நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நீதிமன்றங்களிலும் அரசாங்கம் தோல்வியடைந்ததையும் அவர் கூறினார்.

பொதுப்பணித்துறை XEN ரிஷி சச்தேவா அளித்த விளக்கத்தில், விவசாயிக்கு ஏற்கனவே ₹5.5 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டதாகவும், ஆனால் விவசாயி அதை ஏற்க மறுத்து மேல்முறையீடு செய்ததால் வழக்கு நீடித்து வந்ததாகவும் கூறினார்.

மேலும் விவசாயி “தங்களுக்குரிய தொகையை பெற தயாராக இருந்தால், அந்த பணம் துறை வழியாக பரஸ்பர ஒப்புதலுடன் வழங்கப்படும். ஆனால் மாநில நெடுஞ்சாலையை அடைப்பது தவறானது” என்றும் அவர் தெரிவித்தார்.

SHO ஜோன்பால் சிங் கூறுகையில், “சாலை ஆக்கிரமிப்பு தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. விவசாயி சாலையை திறக்க மறுத்ததால் 2-3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்கள் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

விசாரணைக்குப் பிறகு மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் கூறினார். இச்சம்பவம் மாநில அரசின் இழப்பீடு வழங்கும் செயல்முறைகள் மற்றும் விவசாயிகளின் உரிமை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.