குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு வந்த உறவினர்களுக்கு விருந்தளிப்பது என்பது இந்திய பாரம்பரியமாகும். அதன்படி இந்த திருமண நிகழ்ச்சியில் உணவு பரிமாறப்பட்டது. அப்பொழுது திருமண நிகழ்வின்போது உணவு தீர்ந்து போனதால் மணமகனின் தந்தை திருமணத்தை நிறுத்தப் போவதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து இரு குடும்பத்தாரும் பேச்சு வார்த்தை நடத்திய போதும் மணமகன் வீட்டார் திருமணத்தை நிறுத்துவதில் உறுதியாக இருந்துள்ளனர். இதனால் மணமகன், மணமகளை அழைத்துக்கொண்டு காவல் நிலையம் சென்று எளிமையான முறையில் திருமணத்தை நடத்தி வைக்க கோரிக்கை விடுத்துள்ளார். மணமகன் மற்றும் மணமகளுக்கு திருமணத்தில் விருப்பம் இருந்ததால் காவல்துறையினர் திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரிதும் பேசப்பட்டது.