
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் செல்லம்மாள் (70) என்பவர் வசித்து வருகிறார். இவர் தூய்மை பணியாளராக நெல்லை மாநகராட்சியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சம்பவ நாளில் கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்று பாலம் பகுதியில் நடைபெற்ற தூய்மை பணியில் செல்லம்மாள் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த சாலை வழியாக வந்த அரசு பேருந்து ஒன்று செல்லம்மாள் மீது மோதியதால் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தில் மயக்கமடைந்தார். செல்லம்மாள் கீழே விழுந்ததை கண்டதும் பேருந்து ஓட்டுநர் உடனடியாக பேருந்தில் இருந்த பயணிகளை இறக்கிவிட்டு அரசு பேருந்திலேயே அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
அரசு பேருந்து மருத்துவமனைக்குள் நுழைந்ததும் அங்கிருந்த நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். பேருந்து ஒட்டுநர் சரியான நேரத்தில் செல்லம்மாள் என்பவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பேருந்து ஓட்டுனரின் உதவி மனப்பான்மையும், உயிரைக் காப்பாற்றும் நோக்கமும் பொதுமக்கள் மத்தியில் பாராட்டப்பட்ட வருகிறது.