
பாமக கட்சியில் உள்கட்சி மோதல் அதிகரித்து வருகிறது. அதாவது டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் காரணமாக பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து டாக்டர் ராமதாஸ் தனது தைலாபுரம் தோட்டத்தில் கட்சியின் பல்வேறு நிர்வாகிகளை சந்தித்து பேசி உள்ளார்.
மேலும் கட்சியின் பல்வேறு மாவட்ட செயலாளர்களை நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார். ஆனால் அவர்கள் அப்பதவியில் தொடர்வார்கள் என அன்புமணி ஒரு பக்கம் அறிவித்து வருகிறார். கடந்த வியாழக்கிழமை டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறிய போது, 2026 சட்டமன்றத் தேர்தல் வரை நான் தான் பாமக கட்சியின் தலைவராக இருப்பேன்.
அதன்பின் அன்புமணி இருக்கட்டும் எனக் கூறியிருந்தார். இதனிடையே நேற்று முன்தினம் திடீரென டாக்டர் ராமதாஸ் என் உயிர் மூச்சு இருக்கும் வரை நான் தான் கட்சியின் தலைவராக இருப்பேன் என அறிவித்துள்ளார். மேலும் அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் கூறியுள்ளார்.
இந்நிலையில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்களுடன், டாக்டர் ராமதாஸ் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள பாமக கௌரவத் தலைவர் ஜி.கே மணி சென்றுள்ளார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் ஜி.கே மணி கூறியதாவது, எனக்கு உடல்நலம் சரியில்லாததால் சென்னை தனியார் மருத்துவமனையில் 2 நாட்களாக இருந்து வருகிறேன்.
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மருத்துவர்கள் யாரும் வர மாட்டார்கள் என்பதால் டாக்டர் ராமதாஸின் அறிவுறுத்தலால் வந்துள்ளேன். பாமகவில் தற்போது நிகழும் கருத்து வேறுபாடுகள் மிகவும் வருத்தம் அளிக்கிறது. தலைவர் ராமதாஸ், அன்புமணியும் மனம் விட்டு பேசினால் நல்ல முடிவு எடுக்க முடியும். இந்தப் பிரச்சனை சுமூகமான தீர்வை பெற வேண்டும் என்பதே எனது ஆசை எனக் கூறினார்.