
கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் மறையூர் அருகே மேலாடி பகுதியை சேர்ந்தவர் 26 வயது இளைஞர். அவர் அப்பகுதியில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு தமிழ்நாட்டில் உள்ள திருப்பூர் பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து திருமணம் ஏற்பாடுகள் அனைத்தையும் இரு வீட்டாரும் தடபுடலாக செய்து வந்தனர். இந்நிலையில் திருமணத்திற்கு முந்தைய நாள் பெண் வீட்டார் அனைவரும் மாப்பிள்ளை வீட்டிற்கு வந்துள்ளனர். அதன் பின் திருமண மேடையில் தாலி கட்டுவதற்கு சில நிமிடங்கள் இருக்கும் நேரத்தில் மணப்பெண் தனது செல்போனில் மறையூர் காவல்துறையினரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அதில் தனக்கு மாப்பிள்ளையை பிடிக்கவில்லை என்றும், தன்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்க முயற்சிக்கின்றனர் என்றும் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து திருமணத்தை நிறுத்தினர்.
அதன் பின் இரு வீட்டாரையும் அழைத்து திருமணத்தில் பெண்ணிற்கு விருப்பமில்லை என்று புரிய வைத்து திருமணத்தை நிறுத்தினர். பின் இரு குடும்பத்தாரையும் சமாதானமாக பிரிந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். அதனால் இரு குடும்பத்தினரும் அங்கிருந்து சென்றுள்ளனர்.
இதனிடையே திருமண ஏற்பாடுகள் மற்றும் உணவுகள் அனைத்தும் வீணானது. மணமேடையிலேயே மாப்பிள்ளையை பிடிக்கவில்லை என மணமகள் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.