
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள அனந்தராக் மாவட்டம் பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலை அடுத்து தீ ரெஸிஸ்ட் பிரண்ட் என்ற பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்பு தாக்குதலுக்கு பொறுப்பேற்றது.
இதனைத் தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் அபாயம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தை அடுத்து மத்திய அரசு இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியர்களை வெளியேற உத்தரவிட்டது. மேலும் பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளிலும் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் இருந்து பாகிஸ்தானின் பல்வேறு மாகாணங்களுக்கு பாயும் சிந்து நதி நீர் நிறுத்தப்பட்டுள்ளது. அதன்படி இந்தியா சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தானுக்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் அனுப்பியுள்ளது. அந்தக் கடிதத்தை இந்திய ஜல் சக்தி துறை செயலாளர் தேவாஸ்ரீ முகர்ஜி பாகிஸ்தான் நீர்வளத் துறைக்கு அனுப்பியுள்ளார்.
ஆனால் பாகிஸ்தானின் பல்வேறு மாகாணங்கள் சிந்து நதி நீரையே நம்பி இருப்பதால் இந்த நடவடிக்கை ஓர் போர் அறிவிப்பிற்கு சமம் என பாகிஸ்தான் தெரிவித்து வருகிறது. மேலும் பாகிஸ்தானின் தொடர்ச்சியான எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்பாடுகள் இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.