தமிழகத்தில் நேற்று சட்டசபை கூட்டத்தின் போது நீர் வளம் மிக்க பகுதிகளில் சிறப்பு திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு அனுமதி கொடுத்து புதிய மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதாவுக்கு பூவுலகின் நண்பர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளனர். அதில் நீர்நிலைகள், நீரோடைகள் மற்றும் வாய்க்கால் ஆகிய அமைந்துள்ள 100 ஏக்கருக்கு குறையாத நிலங்களை சிறப்பு திட்டம் எனும் பெயரில் நிறுவனங்களுக்கு ஒருங்கிணைந்து வாரிக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ள நில ஒருங்கிணைப்பு சட்ட மசோதாவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால் பரந்தூர் விமான நிலையம் போன்ற திட்டங்கள் நீர் நிலைகளில் மட்டுமே அமைய ஏதுவாக இருக்கும். மேலும் நீர்நிலைகள் பாதுகாப்பிற்காக இருக்கக்கூடிய சட்டங்கள் மற்றும் ஆணைகள் நீர்த்துப்போகும் வாய்ப்புகளையும் இந்த மசோதா உருவாக்கும். அதோடு மேய்ச்சல் மற்றும் வேளாண்மை சார்ந்த செயல்பாடுகள் பாதிப்படைவதோடு நிலப்பயன்பாடு மாற்றப்படுவது புவி வெப்பமாதலை அதிகரிக்கும் என்று பதிவிட்டுள்ளனர்.