வேலூர் காட்பாடியில் உள்ள பகுதியில் காமேஷ், சுமித்ரா(44) என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். பல் மருத்துவரான இவர்கள் காந்தி நகரில் பல் கிளினிக் ஒன்றை வைத்து நடத்தி வருகின்றனர். இவர்களின் மகன் தனகார்த்திக்(17). இவர் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் எடுத்துள்ளார். டாக்டர் தம்பதியினர் தங்களைப் போன்று தனது மகனையும் டாக்டருக்கு படிக்க வைக்க வேண்டும் என்று நினைத்திருந்தனர்.

ஆனால் குறைவான மதிப்பெண் பெற்றிருந்ததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இது தொடர்பாக சுமித்ராவுக்கும் அவரது மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 26 ஆம் தேதி அன்று சுமித்ரா பொதுத்தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்தது தொடர்பாக மீண்டும் தனது மகனைத் திட்டியுள்ளார். அதனால் அவர் கடந்த 27ம் தேதி எதுவும் சாப்பிடாமல் யாரிடமும் பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

அதனால் சுமித்ரா மனம் உடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். அவர்கள் மூன்று பேரும் வழக்கம்போல் தூங்க சென்றுள்ளனர். நேற்று முன்தினம் காலை காமேஷ் எழுந்து பார்த்தபோது சுமித்ராவை வீட்டில் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பின்புறத்திற்கு சென்று பார்த்து உள்ளார்.

அங்கு அவர் மேற்கூரை இரும்பு கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்த தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.