முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் மனைவியும், தமிழகத்தில் முதல் பெண் முதலமைச்சராக ஜானகி ராமச்சந்திரன் இருந்துள்ளார். இவரது நூற்றாண்டு விழா அதிமுக சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. சென்னையில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் இந்த விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி மங்கல இசையுடன் தொடங்கப்பட்டது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் கலந்து கொண்டார். அவர் மேடையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் ஜானகி அம்மையாரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின் ஜானகி எம்.ஜி.ஆர் புகைப்பட கண்காட்சியையும் திறந்து வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது, எம்.ஜி.ஆர் மற்றும் ஜானகி இருவருக்கும் நூற்றாண்டு விழா எடுத்த பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது. இந்த நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த திரைத்துறையினருக்கு என்னுடைய நன்றி. எம்ஜிஆர், ஜெயலலிதா சந்தித்த பிரச்சினைகளை நாமும் சந்தித்து வருகிறோம். எம்.ஜி.ஆருக்காக திரைத்துறை வாழ்க்கையை துறந்தவர் ஜானகி. இவர் பல்வேறு சோதனையான காலகட்டத்தில் எம்.ஜி.ஆர் உடன் இருந்துள்ளார். அதிமுக எப்போது எல்லாம் பிரச்சனையை சந்திக்கிறதோ அப்போ எல்லாம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது தான் வரலாறு. அதிமுக அழியும் என்ற எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது என்று கூறினார்.