பிரபல இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ் சென்ற 2010ம் வருடம் மசராட்டி(Maserati Granturismo S Coupe) என்ற இத்தாலி சொகுசு காரை இறக்குமதி செய்தார். அதனை தமிழகத்தில் இயக்குவதற்கு ஏதுவாக வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பித்தபோது இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு நுழைவு வரி செலுத்தவில்லை என அந்த வாகனத்தை பதிவுசெய்ய வட்டார போக்குவரத்து அலுவலகம் மறுத்து விட்டது. இதனை எதிர்த்து தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், நுழைவு வரி செலுத்தக்கோரி கடந்த 2019-ம் ஆண்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன்பின் இதனை எதிர்த்து ஹாரிஸ் ஜெயராஜ் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் நுழைவு வரியும் அபராதமும் செலுத்தவேண்டும் என உத்தரவிட்டது.

அதன்படி ரூ.11,50,952 நுழைவு வரி செலுத்த வேண்டும் என தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசுக்கு தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஹாரிஸ் ஜெயராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளார். அதில், 2012ம் வருடம் இந்த காரை விற்றுவிட்டதாகவும் அதற்கு ஏற்கனவே நுழைவு வழியாக ரூ.11,50,000 செலுத்தப்பட்டு விட்டதாகவும் மனுவில் தெரிவித்து இருக்கிறார். நுழைவு வரி குறித்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி சில வழக்குகளில் நுழைவு வரியை மட்டும் செலுத்தவேண்டும் என உத்தரவிட்டனர். அதோடு அபராதத்துடன் செலுத்தவேண்டும் என தனக்கு உத்தரவிட்டுள்ளதாக மனுவில் தெரிவித்துள்ளார். இவ்வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.