சென்னை மாவட்டத்தில் உள்ள வடபழனி அருகே பாலாஜி அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (28). இவருக்கு சரஸ்வதி (23) என்ற மனைவி உள்ளார். மேலும் இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இவர்கள் அப்பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.

சுரேஷ் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஜூன் 17ஆம் தேதி இரவு சுரேஷ் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரது 2 மாத கர்ப்பிணி மனைவி சரஸ்வதி மட்டும் எழுந்து நான்காவது மாடிக்கு சென்றுள்ளார்.

பின்னர் அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். அப்போது சரஸ்வதியின் சத்தம் கேட்டு எழுந்து ஓடி வந்த சுரேஷ் சரஸ்வதியை உடனே மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கேஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து தற்கொலை சம்பவம் என்பதால் கே.எம்.சி மருத்துவமனை மருத்துவர்கள் வடபழனி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் சுரேஷிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சரஸ்வதி கடந்த சில நாட்களாகவே மனநலம் சரியில்லாமல் இருந்து வந்ததாகவும் அதற்கு சிகிச்சை பெற்று வந்ததும் தெரிய வந்தது.

அவர் தற்போது 2 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் தற்கொலை முயற்சியில்  ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் சுரேஷ் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து வடபழனி காவல்துறையினர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து சுரேஷிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.