
ஹைதராபாத்தில் முஷிராபாத் தாசில்தார் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக பூபால மகேஷ் என்பவர் வேலை பார்த்து வருகிறார். அவர் அப்பகுதியைச் சேர்ந்த நபரிடம் சொத்து பிரச்சனை தொடர்பாக குடும்ப சான்றிதழ் வழங்க ரூ.1 லட்சம் லஞ்சம் கொடுக்கும்படி கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த நபர் இது குறித்து லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் புகார் அளித்தார். இதையடுத்து ரசாயனம் தடவிய ரூ. 50 ஆயிரத்தை அந்த நபரிடம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் அந்த நபர் இன்று தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றார். குடும்ப சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்ட வருவாய் ஆய்வாளரிடம் சென்று ரசாயனம் தடவிய ரூ.50,000 லஞ்சமாக கொடுத்தார். அதை வருவாய் ஆய்வாளர் மகேஷ் வாங்கிக் கொண்டார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் லஞ்சம் வாங்கிய மகேஷ்சை கையும் களவுமாக பிடித்தனர். இதையடுத்து வருவாய் ஆய்வாளர் மகேசை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.