இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18-வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் ஆர்சிபி பேட்டிங் செய்தது.

முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்தது. பெங்களூர் அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 43 ரன்கள் எடுத்தார். இதைத்தொடர்ந்து களம் இறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. கடைசிவரை களத்தில் நின்று போராடிய ஷஷாங்க் சிங் அதிகபட்சமாக 61 ரன்கள் எடுத்திருந்தார்.

இதன் காரணமாக பெங்களூர் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று 18 வருடங்களுக்குப் பிறகு தங்கள் கோப்பை கனவை நனவாக்கியது. இந்நிலையில் பெங்களூர் அணி வெற்றி பெற்றதை தற்போது இந்திய தேர்தல் ஆணையம் தங்களுடைய அதிகார பூர்வ எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

அதாவது 18 ஆண்டுகால காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. 18 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்ற பெங்களூர் அணிக்கு வாழ்த்துக்கள். உங்களுக்கு இப்ப 18 வயது ஆகிவிட்டதா.? உடனடியாக வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து நீங்களும் சாம்பியன் போல வாக்களிக்க தயாராகுங்கள் என்று பதிவிட்டுள்ளது.

மேலும் பெங்களூரு அணியின் வெற்றியை குறிப்பிட்டு வித்தியாசமாக பொதுமக்களிடம் ஜனநாயக கடமையை ஆற்றுவதன் விழிப்புணர்வை இந்திய தேர்தல் ஆணைய வெளியிட்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.