
மும்பையைச் சேர்ந்த மாடல் மற்றும் ஃபேஷன் டிசைனர் ஜனவி க்ஷத்ரியாஸ், தனக்கு நடந்த விரும்பத் தகாத அனுபவத்தை வீடியோவுடன் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். ரேபிடோ சேவையில் பயணம் செய்தபோது, அவருடைய ஹேண்ட்பேக்கைத் திறந்து பணம் திருட முயன்ற டிரைவரை கையும்களவுமாக பிடித்த சம்பவம், தற்பொழுது வைரலாகி சமூகத்தில் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், ஆட்டோ டிரைவர் பையில் கை வைக்கும் தருணம், ஜனவி அருகில் வந்து நேரில் பார்த்து தடுக்கின்ற காட்சியும் இடம்பெற்றுள்ளது. தனது மொபைல் சார்ஜ் குறைவாக இருந்ததால் முன்பே பணம் கட்ட அனுமதி கேட்டதையடுத்து, டிரைவர் முதலில் ஒத்துக்கொண்டார். ஆனால் பின்னர் அவரது மதம் குறித்து கேலி செய்ததோடு, “நீ ஹிந்து மாதிரி தெரியல” என அவமதிப்பாக பேசியதாகவும் அவர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
அதற்குப் பிறகு, ஒரு கடையில் காபி பவுடர் வாங்க சென்றபோது, திரும்பி வந்த ஜனவி, தனது பையை முன்பக்கம் திறந்து பணம் எடுக்க டிரைவர் முயற்சித்ததை நேரில் பார்த்ததாக கூறியுள்ளார். “நான் அவரிடம் நேரில் விசாரிக்கும்போது, பையைப் பின் பாதுகாப்பாக வைத்தேன் என பேசினார்; பிறகு அருகிலிருந்த மற்றொரு பெண்ணை குற்றம்சாட்ட முயன்றார்,” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததும் ரேபிடோ நிறுவனம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு, சம்பவத்தைப் பற்றி முழுமையாக விசாரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. “இது எங்கள் சேவைக்கு முரணான சம்பவம். பாதுகாப்பு எங்களது முதன்மை நோக்கம்” என அவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த விடியோவை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பலரும் ஆட்டோ டிரைவருக்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.