
தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் உள்ளாட்சி அமைப்புகளிலும் போட்டியின்றி மாற்றுத்திறனாளிகள் தேர்ந்தெடுக்க தமிழக அரசு வழிவகை செய்துள்ளது. இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பணி பதவி உயர்வில் 4 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த கோரிக்கையை ஏற்று அரசு பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் 4 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசாணை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையில் கூறியிருப்பதாவது, அரசு வேலைகளில் பதவி உயர்வின் போது, பணியிட மாற்றுதலின் போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
அரசால் கண்டறியப்பட்ட பதவிகளுக்கு மட்டுமே இது வழங்கப்படும். இதில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு 1 சதவீதமும், செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கு 1 சதவீதமும், பெருமூளை வாதம், தசைநார் சிதைவு, அமில திரவம் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1 சதவீதமும், ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1 சதவீதமும் அனைத்து மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கு 1 சதவீதமும் என மொத்தம் 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.