உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் அடுத்த மாதம் 7-ம் தேதி தொடங்குகிறது. தற்போது ஐபிஎல் லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் இந்திய வீரர்கள் சிலர் லண்டனுக்கு கிளம்பி சென்றுள்ளனர். அதன்படி விராட் கோலி, முகமது சிராஜ், அஸ்வின், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர் ஆகிய வீரர்கள் லண்டனுக்கு சென்றுள்ள நிலையில் இவர்களுடன் தலைமை பயிற்சியாளர் டிராவிட்டும் உடன் சென்றுள்ளார். சில வீரர்கள் ஐபிஎல் இறுதி போட்டிக்காக விளையாடி வருவதால் அவர்கள் தாமதமாக கிளம்புவார்கள்.

கடந்த 10 வருடங்களில் இந்திய அணி ஐசிசி கோப்பை எதையும் வெல்லாத நிலையில் இந்த வருடமாவது கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது. இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான பரிசு தொகை குறித்த விவரம் வெளிவந்துள்ளது. அதன்படி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு 13.2 கோடி ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட இருக்கிறது. மேலும் போட்டியில் தோல்வியடையும் அணிக்கு 6.5 கோடி ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட இருக்கிறது.