
மது விலக்கு சட்டம் அமலில் இருக்கும் பீகார் மாநிலத்தில் சட்டவிரோதமாக தொடர்ந்து போலி மது விற்பனையானது நடைபெறுகிறது. மேலும் கள்ளச்சாராய விற்பனை மற்றும் அதனால் ஏற்படும் உயிர் பலியும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மோதிஹரி மாவட்டம் லட்சுமிபூர், பாகர்பூர், ஹர்சித்தி பகுதியில் போலி மதுபானம் அருந்திய பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதனிடையே 8 பேர் இறந்த நிலையில், 25 பேருக்கு தொடர் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. போலி மதுபானங்களால் ஏற்படும் உயிரிழப்பு குறித்து சட்டசபையில் கடும் விவாதம் நடந்தது. சரண் மாவட்டத்தில் 40 பேர் மரணமடைந்தது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்ட அறிக்கையை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சி இந்த பிரச்சனையை எழுப்பியது. இந்நிலையில் எதிர்க்கட்சி மீது கோபத்தை வெளிப்படுத்திய முதல்வர் நிதிஷ் குமார், பிற மாநிலங்களில் கூட போலி மதுபானங்களால் உயிரிழப்பு ஏற்படுவதாகவும், மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் எனவும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.