தமிழ் சினிமாவில் தளபதி விஜயின் குருவி திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின். இந்த படத்திற்கு பிறகு நடிகர் சூர்யாவின் ஆதவன் படத்தை தயாரித்தார். அதன் பிறகு தன்னுடைய ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் படங்களை தயாரித்து வரும் உதயநிதி ஸ்டாலின், படங்களை விநியோகிக்கவும் செய்கிறார். ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான உதயநிதி ஸ்டாலின் தற்போது கண்ணை நம்பாதே என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மாமன்னன் என்ற திரைப்படத்திலும் நடித்து வரும் உதயநிதி ஸ்டாலின் அதுதான் தன்னுடைய கடைசி படம் என்றும் இனி அரசியலில் முழு கவனம் செலுத்தப் போவதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் கண்ணை நம்பாதே படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பின் போது நடிகர் உதயநிதி ஸ்டாலின் முக்கிய தகவல் ஒன்றினை சொல்லியுள்ளார். அதாவது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்திலிருந்து தான் வெளியே வந்து விட்டதாகவும், அர்ஜுன் மற்றும் செண்பக மூர்த்தி தான் தற்போது ரெட் ஜெயண்ட் நிறுவனத்தை கவனித்துக் கொள்கிறார்கள் என்றும் கூறினார். மேலும் சினிமா தொடர்பாக இனி என்னை யாரும் அணுக வேண்டாம் எனக் கூறியுள்ளார்.‌ ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்திலிருந்து உதயநிதி ஸ்டாலின் வெளியே வந்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.