இந்தி சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி வர்மா. இவர் வருமான வரித்துறையில் அதிகாரியாக பணியாற்றியவர் ஆவார். இதையடுத்து நடிப்பின் மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாக வேலையை ராஜினாமா செய்து விட்டு சினிமாவில் கால் பதித்தார். அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று பிரபலமான கீர்த்தி வர்மா மீது தற்போது வருமான வரித்துறையினர் மோசடி புகார் கூறியுள்ளனர்.

மும்பை வருமான வரித் துறையில் கணக்குகளை தாக்கல் செய்து வரிகழிவு பெறுவதில் ரூபாய்.264 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றதாக வருமான வரித்துறை உயரதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்படி அவர்கள் ரகசிய விசாரணை மேற்கொண்டனர். அதோடு மும்பை தொழிலதிபர் பூசன் பாட்டீல் என்பவரது வங்கி கணக்கிலிருந்து ரூ.1 கோடி பணம் நடிகை கீர்த்தி வர்மா கணக்கிற்கு பரிமாற்றம் செய்யப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்து கீர்த்தி வர்மாவிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து கீர்த்தி வர்மா கூறியதாவது, தொழிலதிபர் பூசன் பாட்டீலுடன் ஆரம்பத்தில் தொடர்பில் இருந்தேன். அவர் நான் கலந்துகொண்ட நடன நிகழ்ச்சிக்காகவே பணம் கொடுத்தார். அவர் பண மோசடி புகாரில் சிக்கியிருப்பது தெரியவந்தவுடன் அவருடான தொடர்பை கைவிட்டு விட்டேன் என்று கூறினார்.