ஜப்பான் எயர்லைன்ஸின் போயிங் ட்ரீம்லைனர் 737 விமானம் திடீரென 26,000 அடி உயரத்திலிருந்த போது கோளாறு ஏற்பட்ட சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 30 அன்று மாலை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விமானத்தில் பயணித்தவர்கள் அனைவரும் காற்றழுத்தக் கோளாறு காரணமாக ஆக்ஸிஜன் முகமூடிகளை அணிந்து உயிர் காப்பாற்ற நினைத்து நொடியொன்றில் அச்சத்தில் ஆழ்ந்தனர்.

சீனாவின் ஷாங்காய் புடாங் விமான நிலையத்தில் இருந்து ஜப்பான் டோக்கியோ நரிதா விமான நிலையத்தை நோக்கி புறப்பட்ட JL8696 என்ற விமானம், 36,000 அடி உயரத்தில் பறந்த நிலையில் திடீரென 10,000 அடிக்கு கீழிறங்கியது. இந்த பரபரப்பான தரையிறக்கம் 10 நிமிடங்களுக்குள் நிகழ்ந்ததாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது விமானம் வேலை பறந்து கொண்டிருந்தபோது திடீரென கீழே சரிந்த நிலையில் சரியான நேரத்தில் விமானம் தரையிறக்கப்பட்டு பயணிகளின் உயிர் காப்பாற்றப்பட்டது. உடனடியாக அவசரநிலை அறிவிக்கப்பட்டது. பின்னர் ஒசாகா நகரிலுள்ள கான்சாய் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

ஜப்பானின் நில, உள்கட்டமைப்பு, போக்குவரத்து மற்றும் சுற்றுலா அமைச்சகம் தெரிவித்ததாவது, விமானத்தின் காற்றழுத்த அமைப்பில் ஏற்பட்ட கோளாறு அவசரநிலை அலாரம் ஏற்படுத்தியதாக கூறப்பட்டுள்ளது. நொடியிலே ஆக்ஸிஜன் முகமூடிகள் கீழே விழ, பயணிகள் அதிர்ச்சியில் விழித்தெழுந்தனர். “ஒரு மௌனமான வெடிச் சத்தம் கேட்டது. அதற்குப் பிறகு ஆக்ஸிஜன் மாஸ்க் விழுந்தது. விமான சேவகி அழுகையுடன் கத்தினார். ‘விமானத்தில் கோளாறு! முகமூடியை அணியுங்கள்!’ என எச்சரித்தார்,” என ஒருவர் தெரிவித்தார்.

மற்றொரு பயணி, “பயணிகள் சிலர் இறுதி கட்டத்திற்கு சென்றுவிட்டோம் என நினைத்து, ‘குட்பை லெட்டர்கள்’, வில்கள், சொத்துத் தகவல்களை எழுதி வைத்தனர்” என்றும் கூறியுள்ளார். இந்த திடீர் காற்றழுத்த மாற்றம், பலருக்கு மூச்சுத் தடுமாற்றத்தை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம், கடந்த மாதம் ஜூன் 27-ம் தேதி அஹமதாபாத்தில் நிகழ்ந்த போயிங் 787 விமான விபத்தில் 241 பேர் உயிரிழந்த பின்னணியில் நிகழ்வதால், போயிங் நிறுவனத்தின் பாதுகாப்பு தரம் மீதான விமர்சனங்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. கூடுதலாக, கடந்த வாரம் வேறொரு போயிங் விமானம் வியட்நாமில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு விமானத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவத்துக்குப் பிறகு, ஜப்பான் எயர்லைன்ஸ் நிறுவனம், ஒவ்வொரு பயணிக்கும் ¥15,000 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.5,500) நிவாரணம் மற்றும் தங்கும் வசதிகளை வழங்கியுள்ளது. இந்த இயந்திரக் கோளாறு குறித்து தற்போது முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த சம்பவம் விமான பயணிகளுக்கு தொடர்ந்து எழும் பாதுகாப்பு சந்தேகங்களை உறுதியுடன் உருவாக்குகிறது.