கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் ஆரோஹள்ளி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் தயானந்த் சாகர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் பி.எஸ்சி நர்சிங் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தவர் அனாமிகா (19). இவர் அதே கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவ நாளன்று இரவு விடுதியில் இவருடன் தங்கியிருந்த மாணவிகள் இரவு சாப்பிடுவதற்காக வெளியே சென்றுள்ளனர். அப்போது அறையில் தனியாக இருந்த அனாமிகா கதவை உள்புறமாக பூட்டிவிட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.

அவருடன் தங்கிருந்த சக தோழிகள் விடுதி அறைக்கு  திரும்பி வந்த போது கதவு உள்புறமாக பூட்டப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இதுகுறித்து விடுதி வார்டனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அனாமிகா தூக்கில் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து ஆரோஹல்லி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் படி விரைந்து வந்த காவல்துறையினர் அனாமிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த தற்கொலை வழக்கில் எந்தவித தடையமும் கிடைக்கவில்லை. காவல்துறையினர் அனாமிகா தங்கி இருந்த அறை முழுவதும் சோதனை நடத்தியதில் எந்தவித கடிதமும் சிக்கவில்லை எனவும் கூறியுள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் கல்லூரியில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விடுதியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கல்லூரியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.