
தமிழக பா.ஜ.க மைய குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தை தலைமை ஏற்று எச். ராஜா நடத்தினார். கூட்டத்தில் மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். மேலும் முன்னாள் தலைவர் டாக்டர். தமிழிசை சௌந்தர்ராஜன், பா.ஜ.க மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், சட்டமன்ற குழு மேலாளர் நயினார் நாகேந்திரன் மற்றும் மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி போன்ற பா.ஜ.கவின் முக்கிய உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தின் முடிவில் ஒருங்கிணைப்பாளர் எச். ராஜா பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது, நவம்பர் மாதம் 30 ஆம் தேதிக்குள் பா.ஜ.க கிளை தேர்தல் முடிவடையும். தொடர்ந்து பா.ஜ.கவின் நகர, மாவட்டத் தேர்தல்கள் டிசம்பர் மாதம் அறிவிக்கப்படும். மேலும் மாநில தலைவர்கள் குறித்த தேர்தல் ஜனவரி மாதம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது,
இதற்கு பதில் அளித்த எச். ராஜா, இது மிகவும் சிறப்பான செய்தியாகும் சிபிஐக்கு வழக்கு மாற்றப்பட்டது சிறந்த முடிவாகும். விஷ சாராய வழக்கு தமிழக ஆளும் கட்சியின் தோல்வியை எடுத்துக்காட்டுகிறது. மேலும் கூட்டணி குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த எச். ராஜா, கூட்டணி தொடர்பான விஷயங்கள் கட்சி மேலிடமே முடிவு செய்யும் என கூறினார்.