
தலைநகர் டெல்லியில் 70 சட்டசபை தொகுதிகள் இருக்கும் நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களையும், பாஜக 8 இடங்களையும் கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. இந்நிலையில் 2025 ஆம் ஆண்டுடெல்லி சட்டசபை தேர்தலிலும் காங்கிரஸ் பாஜக மற்றும் ஆம் ஆத்மி இடையே மும்முனைப் போட்டி நிலவியது. இங்கு கடந்த 5-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்ற நிலையில் மொத்தம் 60.42 சதவீத வாக்குகள் பதிவானது. இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. டெல்லியில் ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 36 தொகுதிகளை வெல்ல வேண்டும்.
இந்நிலையில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் புதுடெல்லி தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவாலை வீழ்த்தியதன் மூலம் தேசிய கவனத்தைப் பெற்றுள்ளார் பாஜகவின் பர்வேஷ் வர்மா. டெல்லி முன்னாள் முதல்வர் சாஹிப் சிங் பர்மாவின் மகனான இவர் இந்து ஜாட் குடும்பத்தைச் சேர்ந்தவர். மேற்கு டெல்லி மக்களவைத் தொகுதியில் 2014, 2019 தேர்தலில் போட்டியிட்டு மக்களவைக்கு தேர்வானவர். டெல்லியின் அடுத்த முதல்வருக்கான பட்டியலில் இவரது பெயர் இருப்பது குறிப்பிடத்தக்கது.